மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு பவானி ஆற்றில் இருந்து 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தேக்கம்பட்டி கிராமத்துக்கு கடந்த 4 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வழங்கக் கோரி தேக்கம்பட்டி - மேட்டுப்பாளையம் சாலையில் காலிக் குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, ஊராட்சி செயலர் சதீஷ், காரமடை துணை ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மோட்டார் பம்ப் செட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை உடனடியாக சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.