மர்மமான முறையில் இறந்த மூதாட்டியின் நகைகள் காணாமல் போனதால், நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, காந்திபார்க், சலீவன் வீதியைச் சேர்ந்தவர் மணி. திருமணம் உள்ளிட்ட விஷேச காரியங்களுக்கு கச்சேரி ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்து வருகிறார். இவரது மனைவி ரங்கநாயகி (60).
இவர் வீட்டின் அருகே முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் திங்கள்கிழமை மாலை மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். வீட்டின் அருகே மயங்கிக் கிடந்த ரங்கநாயகியின் கழுத்து மற்றும் காதில் இருந்த சுமார் 2 பவுன் நகைகள் காணவில்லை என வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில் ரங்கநாயகியின் கணவர் மணி குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இது கொலையா அல்லது இயற்கையான மரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.