மத்தியிலும், மாநிலத்திலும் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக, பாஜக அரசுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கந்தசாமியை ஆதரித்து அவர் வியாழக்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் அதிமுக, மத்தியில் பாஜக ஆட்சித் தொடர்ந்தால் மக்களுக்கான பல வளர்ச்சித் திட்டங்கள் விரைவு பெறும். திமுக எதிர்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாக உள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக பகல் கனவில் உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சூலூர் நகரத் தலைவர் ரவி, தேமுதிக சார்பில் சூலூர் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.