தமிழகத்தில் 152 தனியார் விதை நிறுவனங்களின் 5,050 விதை ரகங்களை விற்பனை செய்ய விதைச்சான்று இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் போலி விதைகளைத் தடுக்கவும், தரமான விதைகள் விற்பனையை உறுதி செய்யவும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் விதைகளை விதைச் சான்று இயக்குநரகத்தில் பதிவுசெய்து, பதிவு எண் பெறும் நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் விதைச்சான்று இயக்குநரகம் கொண்டுவந்தது. இதற்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பதிவு எண் பெறாத விதை ரகங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலும் 82 தனியார் நிறுவனங்களின் 2 ஆயிரத்து 686 விதை ரகங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு விற்பனைக்கு அனுமதி பெற்றிருந்தன. மார்ச் 1ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பதிவு எண் பெறாத 227 விதை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை விதை ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து விற்பனைக்கும் தடை விதித்தனர்.
அதன் பின் விதை ரகங்களைப் பதிவு செய்யாத விதை நிறுவனங்கள் தங்கள் விதைகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக மாநில விதை ஆய்வு இணை இயக்குநர் (பொறுப்பு) மோகானசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பதிவு எண் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. முதலில் அலட்சியமாக இருந்த நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்ட பின் முறையாக பதிவு செய்து வருகின்றனர். அதன்படி தற்போது 5,050 விதை ரகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நெல், காய்கறி, தானியங்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்பட்ட அனைத்து விதைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக காய்கறியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விதை ரகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பரிசோதனை செய்த விவரங்கள், விதைகளின் குணாதிசயங்கள், உற்பத்தியாளர் சான்று உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 9,600 அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 227 விதை ரகங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத விதைகள் மற்றும் பதிவு எண் பெறும்போது குறிப்பிட்டிருந்த விதைகளின் குணாதிசயங்கள் மாறுபட்டிருந்தாலும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.