பேரூர் அருகே காரை விட்டு இறங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கிய ஆளுநர்
பேரூர் அருகே காரை விட்டு திடீரென இறங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முகக்கவசம் அணியும்படி அங்கிருந்த மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பேரூர் அருகே காரை விட்டு திடீரென இறங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முகக்கவசம் அணியும்படி அங்கிருந்த மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 41ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கோவை வந்தார். முன்னதாக காரில், பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று அவர் தரிசனம் செய்தார்.
அதன் பிறகு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது செல்லும் வழியில், செல்வபுரம் முத்துசாமி பேருந்து நிறுத்தம் அருகே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அவர் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆளுநர் அங்கிருந்தவர்களிடம் முகக்கவசம் ஏன் அணியவில்லை.
சமூக இடைவெளியை ஏன் பின்பற்றவில்லை என கேட்டார்.
இதையடுத்து கரோனா தொற்றில் இருந்து விடுபட அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பிறகு அங்கிருந்து காரில் பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். திட்டமிடல் இல்லாமல் திடீரென ஆளுநர் காரில் இறங்கிச் சென்று மக்களுடன் உரையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.