ஆப்கன் உடனான மோதல்! 331 தலிபான்கள் கொலை - பாக். அரசு அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் 331 தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் இதுவரை 331 தலிபான்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக “ஆபரேஷன் கஸாப் லில்-ஹா” எனும் பெயரில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்கு, தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 331 தலிபான் வீரர்கள் மற்றும் அவர்களது பயங்கரவாதக் கூட்டாளிகள் கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன், ஆப்கானிஸ்தானின் 37 முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்ற நிலையில், 163-க்கும் அதிகமான ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் விடுதலைப் படை, அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது பாகிஸ்தானின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.