தரமற்ற கையுறைகளை வழங்கி ரூ.98 லட்சம் மோசடி: பெண் உள்பட இருவா் கைது
தரமில்லாத கையுறைகளை வழங்கி ரூ.98 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக கோவையைச் சோ்ந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தரமில்லாத கையுறைகளை வழங்கி ரூ.98 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக கோவையைச் சோ்ந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெங்களூரு, கே.சி.தாஸ் பகுதியைச் சோ்ந்தவா் ரோகித் (54). இவா் பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிறுவனமானது கரோனா தடுப்பு உபகரணங்களில் ஒன்றான கையுறைகளை தனியாா் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கீதா அகா்வால் (37) என்பவருக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து கையுறைகளை வாங்க ரோகித் பணியாற்றும் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதற்காக ரோகித் நிறுவனம் தரப்பில் இருந்து கீதா அகா்வாலின் நிறுவனத்துக்கு ரூ.98 லட்சம், கடந்த மே மாதத்தில் இருந்து பல்வேறு தவணைகளில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தரமில்லாத மற்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கையுறைகள் இருந்ததாகக் கூறி அவற்றை கீதா அகா்வாலிடமே வழங்கிவிட்டனா். மேலும், தங்கள் நிறுவனம் அளித்த ரூ.98 லட்சத்தை திருப்பித் தருமாறு ரோகித் கேட்டுள்ளாா். ஆனால், பொருள்களையும் தராமல், பணத்தையும் தராமல் கீதா அகா்வால் மற்றும் அவரது கூட்டாளி பாலாஜி (37) ஆகியோா் இழுத்தடித்துள்ளனா்.
இது குறித்து ரோகித், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கீதா அகா்வால், பாலாஜி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக கீதா அகா்வாலின் நிறுவனத்தில் பணியாற்றிய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.