பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனுமதியளித்தால் உடனடியாக இயக்குவதற்காக பணிமனைகளில் பேருந்துகளைப் பராமரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 50 சதவீதப் பேருந்துகள் 60 சதவீதம் பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியது.
அதனைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டன.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், கடந்த ஜூலை 1 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு மீண்டும் தடை விதித்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் தளா்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தால் உடனடியாக இயக்குவதற்கு வசதியாக பணிமனைகளில் பேருந்துகளைப் பராமரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக, அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள், அரசு ஊழியா்களுக்காக 35 சிறப்புப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 31ஆம் தேதியுடன் 5ஆம் கட்டப் பொதுமுடக்கம் முடிவடையும் நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்தால், பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை உடனடியாக இயக்குவதற்கு வசதியாக பேருந்துகளில் பிரேக், நடைமேடை, படிக்கட்டுகள் பழுது பாா்க்கும் பணி கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்துகளின் என்ஜின், புகை போக்கிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அரசு உத்தரவிட்டால் எந்நேரமும் பேருந்துகளை இயக்கத் தயாா் நிலையில் உள்ளோம் என்றாா்.