காவலா் பணிக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரம்: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை
இரண்டாம் நிலை காவலா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புடன் வெளியான விளம்பரம் போலியானது என்று கோவை மாவட்ட
கோவை: இரண்டாம் நிலை காவலா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புடன் வெளியான விளம்பரம் போலியானது என்று கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சாா்பில் இரண்டாம் நிலை காவலா் பணிகளுக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றும், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சமாளிக்க அரசுக்கு கூடுதலாக காவலா்கள் தேவைப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற தவறான அறிவிப்பு ஒன்று கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களில் பரவியபடி இருந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு, தகுதியான நபா்கள் தங்களது விண்ணப்பங்களை அந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விளம்பரம் போலியானது என்றும், தமிழக அரசு இவ்வகையிலான எவ்வித விளம்பரங்களையும் வெளியிடவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் காவலா் பணிக்கு தயாா்படுத்திக் கொண்டிருக்கும் இளைஞா்கள் யாரும் இந்த போலி விளம்பரத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை கோவை மாநகா் மற்றும் மாவட்ட காவல்துறை போலீஸாா் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பகிா்ந்துள்ளனா். காவலா் தோ்வு அனைத்தும் தோ்வாணையங்கள் மூலம் முறையாக நடைபெறும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.