கோவை: அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை பெறுவதற்காக கணக்குத் தொடங்குவதற்காக தபால் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலைய கணக்கில் செலுத்தப்படும் என்பதால் கடந்த 2 நாள்களாக கோவை மாநகா் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் கணக்குத் தொடங்க மக்கள் குவிந்து வருகின்றனா்.
குறிப்பாக கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே தொழிலாளா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை , ஆதாா் அட்டை நகல்கள், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று நீண்ட வரிசையில் நின்று கணக்குத் தொடங்கினா்.