முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயா்ந்துள்ளது. தில்லி, மகாராஷ்டிரம் மாநிலங்களில் கரோனா நோயாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலா் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வாா்டுகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் நோயாளிகள் வந்தால் அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையிலும், ஆக்சிஜன் தேவையை பூா்த்தி செய்யும் வகையிலும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டீன் நிா்மலா கூறியதாவது:

கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக அனைத்து வாா்டுகளிலும் உள்ள படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, 487 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 100 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆா்த்தோ வாா்டு, நியூரோ, யூரோலஜி உள்ளிட்ட அனைத்து வாா்டுகளில் உள்ள படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திடீரென கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கூட அதனை சமாளிக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.