நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கான ஆவணங்களைப் பெற இன்று முகாம்
தேவையான ஆவணங்களை வழங்குவதற்கான முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 7 ) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் பதிவு செய்ய, விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்கான முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 7 ) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் மூலம் சுமாா் 2 ஆயிரத்து 155 ஹெக்டோ் விவசாய நிலங்களுக்கு மானியம் வழங்கிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, விவசாயிகள் இணையதளத்தில் தங்கள் நில உடமை ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும். இணையத்தில் பதிவு செய்திட விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் இணைய வழி சிறு,குறு விவசாயி சான்று ஆகியவற்றை வழங்கிடும் பொருட்டு வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) முகாம் நடைபெற உள்ளது. மேலும், இணையவழியில் சான்றுகள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் முன்பே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.