28.3.1976: ராஜ்ய சபையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி
ராஜ்ய சபையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி கிடைத்தது பற்றி...
புது டில்லி, மார்ச், 27 - நாடு முழுவதும் ராஜ்ய சபைக்கு இன்று தேர்தல் முடிவடைந்ததையொட்டி, ராஜ்ய சபையில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் இரு மடங்கு மெஜாரிட்டி மீண்டும் கிடைத்தது.
244 மெம்பர்கள் கொண்ட சபையில் தற்போதைய பலம் 146. மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியைப் பெற காங்கிரஸிற்கு இன்றைய தேர்வில் 17 ஸ்தானங்கள் தேவையாக இருந்தது. எதிர்க்கட்சிகளிடமிருந்து 17 இடங்களைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளிடமிருந்து 18 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் இடங்களில் ஒன்றை எதிர்கட்சி கைப்பற்றியது.
Advertisement
Advertisement
இனி ராஜ்ய சபையில் முக்ய வோட்டெடுப்பு ஏதாவது நடந்தால் ஆளும் கட்சிக்கு 3ல் 2 பங்குக்கு மேல் வோட்டு கிடைப்பதில் சிரமமிராது. ஏனெனில் உ.பி.யில் ஒன்றும், ம.பி.யில் ஒன்றும், கர்நாடகத்தில் ஒன்றும் என மூன்று சுயேச்சைகளும் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ராஜ்ய சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துணை மந்திரி வி. என். காட்கில், உதவி வெளி விவகார மந்திரி பின்பால்தாஸ்.
மத்ய மந்திரி சபையில் ரஸாயன பொருள், ரஸாயன உர மந்திரியாகச் சேர்ந்த பி. சி. சேத்தி, ம பி. அசெம்பிளி தொகுதியிலிருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு முக்ய நபர் காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஏ.ஆர். அண்டுலே.
உள்விவகார துணை மந்திரி ஓம் மேத்தா காஷ்மீர் அசெம்பிளி தொகுதியிலிருந்து ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 69 மெம்பர்களும் ஏப்ரல் 2ல் ஓய்வுபெறவிருக்கின்றனர். அவர்களில் 39 பேர் காங்கிரஸ் கட்சியினர்.
69 ராஜ்ய சபை ஸ்தானங்களுக்கு நடந்த தேர்தலில் 57 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இம்மாத ஆரம்பத்தில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 இடங்களில் 24 ஐ காங்கிரஸ் வசப்படுத்தியது. இன்று 41 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 33ஐ காங்கிரஸ் கைப்பற்றியது.
பாரதீய லோக தளத்துக்கு 3 இடங்களும், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும் (போட்டியின்றி கிடைத்த இரு இடங்கள் உட்பட) கிடைத்தன. ஜனசங்கத்துக்கு 2 இடங்கள், ப. காங் 1; இ. கம்யூ. 1; காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை 2. ...
28.3.1976: Congress party again gets 2/3 majority in Rajya Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.