விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிலக்கச் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிலக்கச் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியை தனியார்மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் அண்மையில் வெளியாகின. இது தொடர்பாக, காங்கிரஸ் எம்பியும், செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பாஜகவை கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு தொடர்பாக கடந்த சில நாள்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
Advertisement
Advertisement
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், பிரம்ம பிரகாஷ், யு. ஆர். ராவ், ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் காரணமாக கடந்த 60 ஆண்டுகளாக கவனமாகத் திட்டமிடப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இஸ்ரோவின் திறன், ஆற்றல் மற்றும் அதன் தகுதியைக் கருத்தில் கொள்ளும்போது தற்போது வெளியாகும் செய்திகள் நியாயமான கவலைகளை எழுப்புகின்றன.
அணுசக்தியைப் போன்று விண்வெளித் திட்டத்திலும் மோடி அரசு தீவிரமான தனியார்மயமாக்கல் கொள்கையை பின்பற்றுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்கான உந்துதல் பிரதமர் அலுவலகத்திடம் இருந்தே வருவதும் தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ராக்கெட் உருவாக்குதல் மற்றும் உற்பத்தியில் இஸ்ரோவின் பங்கு வெகுவாகக் குறைக்கப்படவுள்ளது. அதேபோல, இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொடர்பான சொத்துக்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி, இஸ்ரோவின் ரூ. 1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அமையவுள்ள இரண்டாவது விண்வெளி ஏவுதளமும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதுபோன்று மாறிவரும் சூழலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தின் நிலைமை என்னவாகும் என்றே தெரியவில்லை.
இஸ்ரோ இந்தியாவை பலமுறை பெருமைப்படச் செய்துள்ளது. அந்தப் பெருமைகளில் பலமுறை பிரதமரும் முழுமையாகத் திளைத்துள்ளார். விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிச்சயமாக ஊக்கமும் ஆதரவும் அளிக்கவேண்டும். ஆனால், நீண்ட காலாமாக தனியார் துறையுடன் பயன்சார்ந்த கூட்டணி வைத்திருந்த இஸ்ரோ ஏன் திடீரென வலிவிழக்கச் செய்யப்படவேண்டும்? ஏற்கனவே, இதுபோன்ற மாற்றங்கள் வரவிருப்பதை உணர்ந்து 100 - 200 முக்கிய இஸ்ரோ வல்லுநர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர்.
பிரதமரின் மீதான ஈர்ப்பால் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இஸ்ரோவின் புகழ்பெற்ற முன்னாள் தலைவர் கூட இஸ்ரோவின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார். தற்போதுள்ள மற்ற 5 புகழ்பெற்ற இஸ்ரோவின் தலைவர்கள் ஏன் இந்திய முக்கியப் பிரச்னை குறித்து குரல் எழுப்பவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
The Congress has alleged that the BJP is attempting to weaken ISRO's role by privatizing space research.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.