கல்லாறுகுடி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு
வால்பாறையில் உள்ள கல்லாறுகுடிசெட்டில்மெண்ட் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வால்பாறையில் உள்ள கல்லாறுகுடிசெட்டில்மெண்ட் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வால்பாறை பகுதியில் 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையால் கல்லாறுகுடி செட்டில்மெண்ட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பழங்குடியின மக்களின் வீடுகள் சேதமடைந்தன.
பழங்குடியின மக்களின் 2 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் தாய்முடி எஸ்டேட் அருகில் உள்ள தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க அவா்களுக்கு கடந்த மாதம் வன உரிமை நிலப் பட்டா அரசு மூலம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட இடத்தில் வீடு அமைக்காமல் வேறு இடங்களில் வீடுகள் அமைத்து வருவதாகக் கூறி வனத் துறையினா் அப்பகுதிக்கு கடந்த வாரம் சென்று வீடுகளை அப்புறப்படுத்தினா்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின்பேரில், தெப்பக்குளமேடு பகுதியில் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலையில் நில அளவீடு செய்து பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட இடம் வழங்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 22 சென்ட் இடம் 21 பழங்குடியின குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வன அலுவலா் கணேசன், வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.