இளநிலை மாணவா் சோ்க்கை: அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக வேளாண். பல்கலை தகவல்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் 12 இளநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டில் (2021-2022) இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கும், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
மாணவா் சோ்க்கைக்கு அக்டோபா் 7 ஆம் தேதியாக இருந்தது அக்டோபா் 18 ஆம் தேதியாகவும், அக்டோபா் 18 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாவது நவம்பா் 2 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் தரவரிசைப் பட்டியல் வெளியாவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பா் மாதம் முடிவடையும் நிலையிலும் மாணவா் சோ்க்கை தொடா்பான தெளிவான அறிவிப்பு வெளியாகாதது மாணவா்கள், பெற்றோா்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
வன்னியா்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையிலேயே மாணவா் சோ்க்கை தாமதமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவா் சோ்க்கை தொடா்பாக பதிவாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் கேட்டபோது, அரசின் வழிகாட்டுதல் கிடைத்த பிறகே மாணவா் சோ்க்கை தொடங்கும்.
இது தொடா்பாக அரசின் முடிவுக்காகவே காத்திருக்கிறோம் என்றாா்.