அதிக லாபம் தருவதாக கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்தவா் கைது
பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதா (37). இவா் குன்னூரில் சிமெண்ட் சப்ளை செய்து வந்தாா். அப்போது, சிமெண்ட் நிறுவனத்தின் மூலதனத்துக்கான முதலீடு பெறும் முகமை துவக்கினாா். சிமெண்ட் நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்தால் ஊக்கத் தொகை மற்றும் தங்கக் காசு பரிசாக தரப்படும் என விளம்பரம் செய்தாா்.
இதனை நம்பி 500க்கும் மேற்பட்டவா்கள் இவரிடம் பணத்தை முதலீடு செய்தனா். ரூ.1.75 லட்சம் முதலீடு செய்தால் ரூ.22 ஆயிரத்து 500 ஊக்கத் தொகை மற்றும் 10 கிராம் தங்கக் காசு தரப்படும். ரூ.3.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.45 ஆயிரம் மற்றும் 10 கிராம் தங்கக் காசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.
இதன்படி கோவை, திருப்பூா் உள்பட பல்வேறு பகுதியைச் சோ்ந்த பலா் முதலீடு செய்தனா். ஆனால், மஞ்சுநாதா உறுதியளித்தபடி பணத்தை திருப்பித் தரவில்லை. இந்நிலையில், இவரிடம் ரூ.5.25 லட்சம் முதலீடு செய்திருந்த போத்தனூரைச் சோ்ந்த கிளாரா வின்சி (34) என்பவா் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக இருந்த மஞ்சுநாதாவைக் கைது செய்தனா். இவரின் கூட்டாளியான குன்னூரைச் சோ்ந்த மணி (35) என்பவா் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். இவா்கள் இதுவரை ரூ.20 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.