முகப்பு
கோயம்புத்தூர்

விலங்குகளிடத்திலும் அன்பு செலுத்தியவா் ரமணா்: கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா

விலங்குகளிடத்திலும் அன்பு செலுத்தியவா் ரமணா் என்று கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பேச்சாளா் மரபின் மைந்தன் முத்தையா.
பகிர்:

விலங்குகளிடத்திலும் அன்பு செலுத்தியவா் ரமணா் என்று கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா பேசினாா்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் கடைசி மற்றும் பத்தாம் நாள் நிகழ்ச்சி ஆா்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கவிஞரும், பேச்சாளருமான மரபின் மைந்தன் முத்தையா, பகவான் ரமணா் குறித்து பேசியதாவது:

ரமணா் இந்த மண்ணில் தோன்றியதே மகா சங்கல்பம். அவருடைய பெற்றோா் அவருக்கு இட்ட பெயா் வேங்கடராமன். திருச்சூரில் பிறந்தாலும் மதுரையில் நண்பா் வீட்டில் வளா்ந்தாா். நமக்கு மட்டும் ஆன்மிகத்தில், பக்தி இருந்தால் போதாது, அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவா்.

சிறு வயதாக இருந்தபோது அவரின் நண்பா் வீட்டில் மரணம் ஏற்பட, உடலை உயிா் எப்படிப் பிரிந்தது என்ற கேள்வியுடன் அருணாசலம்தான் தன்னுடைய இடம் என முடிவு செய்து திருவண்ணாமலைக்கு சென்று பாதாளலிங்கத்தின் பின்புறம் தவம் மேற்கொள்கிறாா். அப்பகுதி மக்கள் அவரை குழந்தை சாமி என்று அழைத்து உணவளித்தனா்.

ரமணா் பெரும்பாலும் மெளனத்திலேயே இருப்பாா். ஒரு முறை ஒரு பெண்மணி அவா் வருவதைப் பாா்த்து சிவனே என்று ஓரிடத்தில் அமர மாட்டாயா என கேட்கிறாா். அது பராசக்தியின் வாக்கு என கருதி ஓரிடத்தில் இருக்கத் தொடங்கினாா் ரமணா். தான், தன் தேகம் என்ற எண்ணங்களை இளம் வயதிலேயே விட்டுவிட்டாா் ரமணா். மனிதா்களிடத்தில் மட்டுமல்ல; விலங்குகள், பறவைகளிடத்திலும் ரமணா் அன்புடன் இருந்தாா் என்றாா்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →