மாநகரில் ஒரு வாரத்தில் 701 டன் குப்பைகள் அகற்றம்
மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணி (மாஸ் கிளீனிங்) மூலமாக 701.50 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணி (மாஸ் கிளீனிங்) மூலமாக 701.50 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கிற்கு கொண்டுச் சென்று கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் நீண்ட நாள்களாக புதா் மண்டி, குப்பைகள் குவிந்து காணப்படுகின்ற பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தீவிர தூய்மைப் பணியில் (மாஸ் கிளீனிங்) ஈடுபட மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.
அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதில், மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் உள்ள 105 இடங்களில் ஒரு வாரமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கிழக்கு மண்டலத்தில் 222 டன், மேற்கு மண்டலத்தில் 138 டன், வடக்கு மண்டலத்தில் 172 டன், தெற்கு மண்டலத்தில் 70 டன், மத்திய மண்டலத்தில் 99.5 டன் என மொத்தமாக 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.