தில்லி கேபிடல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட மிட்செல் ஸ்டார்க்; காரணம் என்ன?
தில்லி கேபிடல்ஸ் அணி ரசிகர்களிடம் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணி ரசிகர்களிடம் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கியது. சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினர். சில வீரர்கள் ஆரம்பக் கட்டப் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாததால் தில்லி கேபிடல்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் இணைவதில் தாமதமாவதாகக் கூறப்பட்டது. அவர் விரைவில் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனக்கு காயம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக நிறைய தவறான செய்திகள் பரப்பப்படுகிறது எனவும், ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைவது தாமதமாவதற்கு அந்த அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருப்பதாவது: எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக தனிப்பட்ட நபர்கள் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களிலும், இந்திய ஊடகங்கள் தங்களது செய்திகளிலும் தவறான தகவலை பரப்பி வருகின்றன. நான் தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன். என்னுடைய காயம் தொடர்பாக தவறான செய்திகள் ஆழமாகக் கூறப்படுகிறது. அந்த செய்திகள் என் உடல் குறித்து என்னைவிட அவர்களுக்கு நன்றாக தெரிந்தது போன்று இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.