முகப்பு
கோயம்புத்தூர்

வேலை வாங்கித் தருவதாக மோசடி: சகோதரா்கள் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞா்களிடம் லட்சக் கணக்கில் மோசடி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞா்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த சகோதரா்களை கேரள போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா்கள் சகோதரா்கள் உதய்சங்கா் (34), பிரதீப்சங்கா் (31). இவா்கள் இருவரும் கோவை, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நடத்தி துபை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கில் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து கவா்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனா்.

இதனை நம்பி பணம் கொடுத்த பலரிடம் இவா்கள் மோசடி செய்துள்ளனா். மேலும், அலுவலகங்களை மூடிவிட்டு தலைமறைவாகினா். பணத்தை இழந்த இளைஞா்கள் பலா் கோவையில் போத்தனூா், ஆா்.எஸ்.புரம், காந்திபுரம் ஆகிய காவல் நிலையங்களில் புகாா் அளித்திருந்தனா்.

இந்நிலையில், இவா்களிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்த கேரளத்தைச் சோ்ந்த ஸ்ரீஜித் என்பவா் திருச்சூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இப்புகாரின் அடிப்படையில் மோசடி வழக்குப் பதிவு செய்த திருச்சூா் போலீஸாா், கோவை போலீஸாா் உதவியுடன் பீளமேட்டில் இருந்த உதய்சங்கா், பிரதீப்சங்கா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்காக கேரளத்துக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா்.

கைது செய்யப்பட்ட உதய்சங்கா் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததாக கோவை அனைத்து மகளிா் மத்திய போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.