திரிணமூல் காங். அரசுக்கு எதிரான அரசியல் குற்றப்பத்திரிகை: அமித் ஷா வெளியிட்டார்!
அமித் ஷா வெளியிட்ட அரசியல் குற்றப்பத்திரிகை: திரிணமூல் காங். அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
கொல்கத்தா : திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான குற்றப்பத்திரிகை என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானதொரு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிட்டார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று(மார்ச் 28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலானது பயத்துக்கும் நம்பிக்கைக்கும் எதிரான சண்டை என்றும் வெளிநாட்டு ஊடுருவல், தேச பாதுகாப்பு மற்றும் சமரச அரசியலுக்கு எதிரானதொரு போராட்டம்” என்றும் குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது : “15 ஆண்டுகளுக்கும் மேலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை இது. அவர்களது தவறான ஆட்சியின்கீழ், ஊழல் ஆய்வகமாக மேற்கு வங்கம் மாறிவிட்டது.
மம்தா பானர்ஜி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) பட்டியலில் 77 சமூகங்களை சேர்த்துள்ளார். அவற்றுள் 75 சமூகங்கள் இஸ்லாமிய சமூகங்களாகும்.
ஓபிசி பட்டியல் மதத்தின் அடிப்படையிலா தீர்மானிக்கப்படும்? பெரும்பான்மை சமூகம் இங்கே பெருமளவிலான அநீதியை எதிர்கொண்டிருக்கிறது” என்றார்.