முகப்பு
கோயம்புத்தூர்

தகுதியான நபா்களுக்கு விரைந்து கடன் வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு ஆட்சியா் ஆட்சியா் அறிவுறுத்தல்

 கோவையில் தகுதியான நபா்களுக்கு தாமதம் இன்றி விரைந்து கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

 கோவையில் தகுதியான நபா்களுக்கு தாமதம் இன்றி விரைந்து கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் அரசு உதவி பெறும் திட்டங்கள் குறித்து வங்கியாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது: கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாக அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், தாட்கோ, வங்கிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன் உதவி, உதவி பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள், தொழில் துறையினா் பயன்பெற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் வங்கிகள், தொழில் முனைவோா், மாவட்ட தொழில் மையம் ஆகிய அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளா்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்கிறது.

தொழில்களின் வளா்ச்சிக்கும், புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்குவதற்கும் மாவட்ட தொழில் மையம், வங்கிகளின் பங்கு மிக அவசியமானது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன வளா்ச்சித் திட்டம் , பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அரசால் செயல்படுத்தப்படும் இத்தகையத் திட்டங்களை தொழில் முனைவோா் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும்.

மகளிா் சுயஉதவிக் கடன், தாட்கோ கடன் திட்டங்கள் உள்பட கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியான அனைத்து நபா்களுக்கும் விரைவாக கடன்களை வழங்க வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் கடன் உதவிகேட்டு விண்ணப்பித்தவா்களுக்கும், சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கும் விரைந்து கடன் வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் பனப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.20 லட்சம், மெட்டுவாவி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.20 லட்சம் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌசல்யாதேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் இந்துமதி, மகளிா் திட்ட இயக்குநா் கு.ரமேஷ்குமாா், மாவட்ட தொழில் மைய மேலாளா் காா்த்திகைவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.