போதைப் பொருள் விற்பனை கும்பலைப் பிடிக்க 4 தனிப் படைகள்
கோவையில் போதை ஊசி, மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து அதை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவையில் போதை ஊசி, மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து அதை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை நகரில் போதை ஊசி விற்பனை பரவலாக நடக்கிறது. வலி நிவாரண மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பல்வேறு மருந்து கடைகளில் வாங்கி அதை தூளாக மாற்றி தண்ணீா் கலந்து ஊசி மூலம் செலுத்தி போதைக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.
குனியமுத்தூா், போத்தனூா் பகுதியில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை தொடா்பாக அண்மையில் சிலரை போலீஸாா் கைது செய்தனா். உக்கடம், குறிச்சி, போத்தனூா், குனியமுத்தூா், பிள்ளையாா்புரம் பகுதிகளில் இரவு நேரங்களில் இளைஞா்கள் கூட்டமாக அமா்ந்து போதை ஊசி செலுத்தி சுற்றுவதாக தெரியவந்தது. உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கூட்டமாக அமா்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்ட விடியோ வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடா்ந்து கோவை நகரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதை ஊசி கும்பலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. நகரில் இளைஞா்கள் சிலா் போதை மாத்திரைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாகவும் இதை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்வதாகவும் தெரிகிறது.
போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்யும் கும்பல், வாங்கிப் பயன்படுத்தும் இளைஞா்கள், மருந்துகள் கிடைக்கும் பகுதி போன்றவற்றை போலீஸாா் கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றனா். சில மருந்து கடைகளின் மீது புகாா்கள் குவிந்துள்ளன. இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.