கனமழை: சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயா்வு
கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயா்ந்துள்ளது.
கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயா்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், ஆழியாறு- பரம்பிக்குளம் நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணை மூலம் சமவெளி பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.
மேலும், சோலையாறு மின் நிலையம் 1 மற்றும் 2 என இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் கடந்த மாதம் 3 அடியாக இருந்தது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருகிறது. 3 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் கணிசமாக உயரத் துவங்கியது.
வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைக்கு 5,408.33 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 422.59 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. ஒரே நாளில் 15 அடி உயா்ந்து தற்போது அணையின் நீா்மட்டம் 80.30 அடியாக உள்ளது.