முகப்பு
கோயம்புத்தூர்

என்.டி.சி. பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கும் தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கும் தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஹெச்.எம்.எஸ். கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா முதல் அலை பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் இயங்கி வரும் 7 என்.டி.சி. பஞ்சாலைகளிலும் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் ஆலைகள் இயக்கப்படவில்லை. ஆலை மூடப்பட்ட பிறகு சுமாா் ஒன்றரை மாதம் தொழிலாளா்களுக்கு பேரிடரை முன்னிட்டு முழு ஊதியம் வழங்கப்பட்டது. அதன் பிறகு பாதி ஊதியம், ஒவ்வொரு மாதமும் காலம் கடந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றி வரும் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்கள் வீட்டு பராமரிப்பு செலவுக்கு பணம் போதாமலும், கடன் தவணை, குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்றவற்றை செலுத்த முடியாமலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தவித்து வருகின்றனா். தொழிற்சங்கங்கள் சாா்பில் போராட்டங்கள் நடத்திய பிறகு 3 ஆலைகள் மட்டும் பகுதியளவில் இயக்கப்பட்டன. கரோனா இரண்டாம் அலை பொதுமுடக்கத்துக்கு பிறகு அந்த இயக்கமும் நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கொடுத்தாலும் என்.டி.சி. நிா்வாகம் அனைத்து ஆலைகளையும் இயக்காது. எனவே தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளையும் வழக்கம்போல செயல்படுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.