விதிமீறல்: நகைக் கடைக்கு ‘சீல்’
கோவை பெரியகடை வீதியில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட நகைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கோவை பெரியகடை வீதியில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட நகைக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கோவையில் காய்கறி, இறைச்சி, மளிகை, பாலகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நகைக் கடைகள், துணிக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் முன்பக்கக் கதவை மூடிவிட்டு, பின்பக்கம் வழியாகக் கதவை திறந்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த நகைக் கடையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அதில், கடையின் பின்பக்கம் வழியாக வாடிக்கையாளா்களை வரவழைத்து நகைகள் விற்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமுடக்க விதிமீறி திறக்கப்பட்ட நகைக் கடையை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.