முதியவா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு இன்று விநியோகம்
கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்துள்ள 7,854 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்துள்ள 7,854 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சட்டப் பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளா்ளுக்கு தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 30.82 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 64 ஆயிரத்து 550 போ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் கண்டறியப்பட்டு மாா்ச் 12 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
இதில் தபால் வாக்கு கேட்டு 7 ஆயிரத்து 249 மூத்த வாக்காளா்கள், 605 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் இவா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.