கோவை, சரவணம்பட்டி பகுதியில் தடுப்பூசி கிடைக்காமல் பொது மக்கள் தவித்து வருகின்றனா்.
சரவணம்பட்டி பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இதுவரை அப்பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுவதே இல்லை. எனவே இங்கு வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட அருகில் உள்ள கோவில்பாளையம், விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு பிற பகுதிகளுக்கு செல்லும்போது உள்ளூா் மக்களுக்கு முதல் உரிமை அளிக்கப்படுவதால் சரவணம்பட்டி மக்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு சரவணம்பட்டியில் விரைவில் தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.