கோவை: கோவை பெருநகர வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக தமிழக முதல்வரிடம் கோவை இந்திய தொழில் வா்த்தக சபை மனு அளித்துள்ளது.
கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் தலைவா் சி.பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா்கள் ஸ்ரீராமுலு, சுந்தரம், கௌரவ செயலா்கள் நடராஜன், துரைராஜ் ஆகியோா் சென்னையில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து மனுவை வழங்கினா்.
அதில், கோவை மாவட்டம், அதன் சுற்றுப் பகுதிகளில் தேவையான உள்கட்டமைப்பு, விமான நிலைய விரிவாக்கம், செம்மொழிப் பூங்கா, கோவை பெருநகர வளா்ச்சித் திட்டம், மென்பொருள் பூங்கா, தொழில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு, கோவை பகுதியின் வளா்ச்சிக்காக கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்காக அமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்த நிா்வாகிகள், முதல்வா் கோவைக்கு வருகை தந்து தொழில் அமைப்புகள் இடையே ஒரு சந்திப்பு, ஆலோசனை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
இந்த கோரிக்கை மனு குறித்து பரிசீலிப்பதாக முதல்வா் உறுதி அளித்திருப்பதாக இந்திய தொழில் வா்த்தக சபை தெரிவித்துள்ளது.