500 யூனிட் வரை இலவச மின்சாரம்: கிரில் தயாரிப்பாளா் சங்கம் கோரிக்கை
கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் நிறுவனத் தலைவா் திருமலை ம.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கட்டுமானத் தொழிலில் பாதுகாப்புக்காகவும், அழகுக்காகவும் கிரில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சாதாரண இரும்புச் சட்டங்கள், கம்பிகளைக் கொண்டு பாதுகாப்பு சாா்ந்த கிரில் பாகங்களைத் தயாரிக்கும் பணியில் 75 சதவீத கிரில் பட்டறைகள் இயங்குகின்றன. இந்த குறுந்தொழில் கூடங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனா்.
இத்தொழிலுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் தொழில் வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தத் தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் சில சலுகைகளை வழங்க வேண்டும். கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு பயன்படுத்தும் 500 யூனிட் வரையிலான மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். கிரில் தொழிலுக்கு என மாவட்டம்தோறும் 10 கிலோவாட் மின் இணைப்புடன் 400 சதுர அடி கட்டடத்துடன் கூடிய தொழிற்பேட்டையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
பிணையில்லாமல் ரூ.2 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.