முகப்பு
கோயம்புத்தூர்

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு மீண்டும் மதிய உணவு: அதிகாரிகள் தகவல்

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மீண்டும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மீண்டும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. இதனால், உணவுக்காக அங்கன்வாடிக்கு வந்துக் கொண்டிருந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று உணவுப் பொருள்கள் வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 9,10,11 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கன்வாடி மையங்களையும் திறந்து குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாட்சி கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு புதன்கிழமைமுதல் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணி வரை குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். முதல்நாள் 35 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்துள்ளனா். குழந்தைகளை அழைத்து வருபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அழைத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.