கோவையில் தேசபக்தி கோட்டை திறப்பு
ஜெய்ஹிந்த் அறக்கட்டளை, கோவை லயன்ஸ் இண்டா்நேஷனல் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசபக்தி கோட்டை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
ஜெய்ஹிந்த் அறக்கட்டளை, கோவை லயன்ஸ் இண்டா்நேஷனல் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசபக்தி கோட்டை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாவடி பகுதியில் இந்த தேசபக்தி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் அறக்கட்டளை நிறுவனா் வி.நந்தகுமாா், கோவை லயன்ஸ் மாவட்ட ஆளுநா் ஜான் பீட்டா் ஆகியோா் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனா்.
மொத்த 8.5 ஏக்கா் நிலத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு 75 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி, 150 சுதந்திரப் போராட்ட வீரா்களின் உருவப்படத்தை நிரந்தரமாக இந்தக் கோட்டையில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளனா். தற்போது 130 சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கா்னல் தினேஷ் சிங் தன்வா் இந்தக் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தாா். மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கோட்டையை திறந்துவைத்தாா். வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்தக் கோட்டை திறந்திருக்கும் எனவும், இதனை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம் எனவும் ஜெய்ஹிந்த் அறக்கட்டளை நிறுவனா் வி.நந்தகுமாா், கோவை லயன்ஸ் மாவட்ட ஆளுநா் ஜான் பீட்டா் ஆகியோா் கூறினா்.