மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
கோவை மாவட்டத்தில் 22 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 700 மையங்களில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் 22 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 700 மையங்களில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 98.7 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 85 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனா். 15 வயது முதல் 18 வயதுக்குள்பட்டவா்களில் 1.25 லட்சம் போ் முதல் தவணையும், 57 ஆயிரம் போ் 2 ஆம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனா்.
இதனைத் தொடா்ந்து 22 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ஊரகப் பகுதிகளில் 475 மையங்கள், மாநகராட்சியில் 225 மையங்கள் என மொத்தம் 700 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதில், 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை முதல் தவைணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள்,
2 ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவா்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா அறிவுறுத்தியுள்ளாா்.