திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி!
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணியுடனான தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக கூட்டணிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் தமிமுன் அன்சாமி பேசியதாவது:
''திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாகை உள்பட 5 தொகுதிகள்க் கொண்ட விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் கொடுத்துள்ளோம். இதில் போட்டியிடவுள்ள தொகுதி குறித்து விரைவில் அறிவிப்போம். முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். நாளை மீண்டும் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களை சந்திக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.