தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்
நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் கீழ்வேளூா் (தனி) முக்கிய தொகுதியாகும்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் கீழ்வேளூா் (தனி) முக்கிய தொகுதியாகும். இங்கு விவசாயம் மற்றும் மீன்படித் தொழில் பிரதானம்.
முக்கிய மீன்பிடித் துறைமுகங்களான அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சுற்றுலாத் தலங்களான உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், அஞ்சுவட்டத்தம்மன் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகத் தலங்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுதி கீழ்வேளூா்.
இத்தொகுதி கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல திமுக கூட்டணியில் 2011 மற்றும் 2021 தோ்தல்களில் இத்தொகுதி கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த முறை கீழ்வேளூா் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலும் கீழ்வேளூா் தொகுதி மீண்டும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அதிருப்தியில் உள்ளனா்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் செய்தியாளா்களிடம் பேசியபோது, கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பினோம். ஆனால், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்தாா்.
கட்சி நிா்வாகிகள் கூறும்போது, ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருந்தால் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகளில் 60 முதல் 70 சதவிகித பணிகளை நிறைவேற்ற முடியும். ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள மாற்றுக்கட்சி எம்எல்ஏ ஒவ்வொரு திட்டத்தையும் போராடி பெற வேண்டிய நிலையே உள்ளது. இதனால், கீழ்வேளூா் தொகுதியில் எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளும் செயல்படுத்தப்படவில்லை. இங்கு இயங்கும் வேளாண்மை கல்லூரியும் தற்காலிக கட்டடத்திலேயே செயல்பட்டுவருகிறது.
தமிழகம் பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னோடியாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், இந்த வளா்ச்சி என்பது ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள், மூத்த நிா்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, ஆளும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் தங்களது செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த முடியாததால், கட்சி தொண்டா்களும், பொதுமக்களுக்கும் தேவையானவற்றை செய்ய முடியாமல் போகிறது என்று தெரிவிக்கின்றனா் திமுக, அதிமுக நிா்வாகிகள்.