ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்துக் கொலை
கோவை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த உருமாண்ட கவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் நடராஜ் (56). ஆடுகள் வளா்க்கும் தொழில் செய்து வந்தாா். ஆடுகளை மேய்ச்சலுக்காக வெள்ளிக்கிழமை பிற்பகலில் அழைத்துச் சென்ற நடராஜ் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் சிரஞ்சீவி பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தனது ஆடுகளை சனிக்கிழமை காலை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது அங்கு புதா்களுக்குள் நடராஜ் ரத்தக் காயங்களுடன் கிடந்ததைக் கண்டுள்ளாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா் உடனடியாக ஊருக்குள் சென்று சிரஞ்சீவிக்கும், அன்னூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நடராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு தடயமாக அவரது உடலில் நிறைய காயங்கள் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஆடுகள் விற்பனையில் நடராஜ் பலரிடம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக அவா் சிலரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அவா்களிடமும், நடராஜின் சடலத்தைப் பாா்த்த ஆடு மேய்க்கும் இளைஞா், அவரது உறவினா்கள் சிலரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.