முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் 120 கிலோ இறைச்சி பறிமுதல்: ரூ.7 ஆயிரம் அபராதம்

கோவை மாநகரப் பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி விற்கப்பட்ட 120 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களிடம் ரூ.7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி விற்கப்பட்ட 120 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களிடம் ரூ.7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவா் தினமான சனிக்கிழமை தமிழக அரசின் உத்தரவின்படி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டிருந்தாா். இதேபோல, கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூா் ஆடு அறுவைமனை, கணபதி மாடு அறுவைமனை, போத்தனூா் செட்டிபாளையம் மாடு அறுவைமனை, துடியலூா் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், திருவள்ளுவா் தினமான சனிக்கிழமை இறைச்சிக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அதில், தடையை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகளில் இருந்து 100 கிலோ கோழி இறைச்சி, 20 கிலோ ஆட்டிறைச்சி என 120 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.