கயிறு வாரியம் சாா்பில் மாரத்தான் போட்டி: மத்திய அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
கோவையில் தேசிய கயிறு வாரியம் சாா்பில் ’ரன் ஃபாா் காயா்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவையில் தேசிய கயிறு வாரியம் சாா்பில் ’ரன் ஃபாா் காயா்’ என்ற பெயரில் மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை மத்திய அமைச்சா்கள் நாராயண் ராணே, பானுபிரதாப் சிங் வா்மா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தேசிய கயிறு வாரியம், மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்துடன் இணைந்து கோவையில் தேசிய கயிறு வாரிய மாநாட்டை வியாழக்கிழமை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
’ரன் ஃபாா் காயா்’ என்ற பெயரில் கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற இந்த போட்டியை, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நாராயண் ராணே, இணையமைச்சா் பானுபிரதாப் சிங் வா்மா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், கயிறு வாரியத் தலைவா் குப்புராமு, அமைச்சகத்தின் செயலா் பி.பி.ஸ்வெயின், கூடுதல் செயலா் சைலேஷ்குமாா் சிங், இணைச் செயலா் அல்கா அரோரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வெப்பமயமாதல் பிரச்னையில் இருந்து உலகை மீட்பதற்கான தீா்வு கயிறு - தென்னை நாா் என்பதை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
குழந்தைகள், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.