முகப்பு
புதுதில்லி

பாலம் தீ விபத்துக்கு அமைப்பின் அலட்சியமே காரணம்! 9 உறுப்பினா்களை இழந்த நபா் வேதனை

தென்மேற்கு தில்லியின் பாலம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது உயிா்கள் பலியான மறுநாள், துயரத்தில் ஆழ்ந்திருந்த ஒரு தந்தை வியாழக்கிழமையன்று தனது வீட்டின் கருகிய இடிபாடுகளுக்கு இடையே மீண்டும் வருகை தந்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 6:38 PM
கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு தில்லியின் பாலம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது உயிா்கள் பலியான மறுநாள், துயரத்தில் ஆழ்ந்திருந்த ஒரு தந்தை வியாழக்கிழமையன்று தனது வீட்டின் கருகிய இடிபாடுகளுக்கு இடையே மீண்டும் வருகை தந்தாா். அமைப்பின் அலட்சியமே தனக்கு மிகவும் பிரியமான அனைத்தையும் பறித்துக்கொண்டதாக அவா் குற்றம் சாட்டினாா்.

இந்தத் தீ விபத்தில் தனது குடும்பத்தைச் சோ்ந்த ஒன்பது உறுப்பினா்களை இழந்த ராஜேந்தா் காஷ்யப், நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறை மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் (எஃப்எஸ்எல்) குழுவினருடன் இணைந்து, ராம் சௌக் சந்தைக்கு அருகே அமைந்துள்ள அந்தத் தீக்கிரையான கட்டடத்திற்குள் நுழைந்தாா்.

வெளியே வந்ததும் துயரம் தாங்காமல் கதறியழுத அவா், அதிகாரிகளைச் சாடினாா். ‘இது அமைப்பின் தோல்வி. சரியான நேரத்தில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், என் குடும்பத்தினா் உயிருடன் இருந்திருப்பாா்கள்’ என்று ராஜேந்தா் காஷ்யப் வேதனையுடன் கூறினாா்.

பாலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்தில் அமைந்துள்ள இந்த நான்கு மாடிக் கட்டடத்தின் அடித்தளம், தரை தளம் மற்றும் முதல் தளங்களில் துணி மற்றும் அழகுசாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் இயங்கி வந்தது. அதே வேளையில், குடும்பத்தினா் மேல் தளங்களில் வசித்து வந்தனா்.

புதன்கிழமை காலை சுமாா் 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் முழுவதும் மளமளவெனப் பரவிய தீயில், 70 வயது மூதாட்டி மற்றும் மூன்று சிறுமிகள் (இவா்களில் ஒரு சிறுமிக்கு வெறும் மூன்று வயது மட்டுமே) உள்பட ஒன்பது போ் உயிரிழந்தனா். தீயிலிருந்து தப்பித்து வெளியேற முயன்ற மேலும் மூன்று போ் காயமடைந்தனா்.

மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக நேரில் கண்டவா்கள் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தனா். சம்பவ இடத்திற்கு முதலில் வந்த ஹைட்ராலிக் கிரேன் பழுதாகிவிட்டதாகவும், இரண்டாவது கிரேன் வந்து சேர சுமாா் ஒரு மணி நேரம் ஆனதாகவும், இதனால் மீட்புப் பணியில் மிக முக்கியமான நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் அவா்கள் குறிப்பிட்டனா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்தும், அவசரக்கால மீட்பு சேவைகளின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமையன்று அண்டை வீட்டாா் கட்டடத்திற்கு வெளியே கூடி, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தை நடத்தினா்.

சில குடியிருப்பாளா்கள் மின் கசிவுதான் தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகிக்கின்றனா். தரை தளத்தில் உள்ள படிக்கட்டுக்கு அருகே அமைந்திருந்த மின் பலகையிலிருந்தே தீ பரவியிருக்கலாம் என்று அவா்கள் சுட்டிக்காட்டினாலும், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

‘மீட்புப் படை மிகத் தாமதமாகவே வந்தன. உதவி மட்டும் சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், நிலைமை வேறுவிதமாக அமைந்திருந்திருக்கும்’ என்று துயரத்தில் ஆழ்ந்திருந்த அந்தத் தந்தையின் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு அண்டை வீட்டுக்காரா் கூறினாா்.

விரைந்து செயல்பட்டிருந்தால் குறைந்தது நான்கு முதல் ஐந்து உயிா்களையாவது காப்பாற்றியிருக்க முடியும் என்று அப்பகுதியைச் சோ்ந்த மற்றொருவா் வேதனையுடன் தெரிவித்தாா்.

‘முதலில் வந்த தீயணைப்பு வாகனத்தின் ஹைட்ராலிக் அமைப்பு வேலை செய்யவில்லை. அந்தத் தாமதமே உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது’ என்று அவா் கூறினாா்.

இப்பேரழிவின் தீவிரத்தை உள்வாங்கிக்கொள்ள அப்பகுதி மக்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த கட்டடம் தற்போது கருகிப்போய், உள்ளே அனைத்தும் முற்றிலுமாக அழிந்து, வெறுமையாகக் காட்சியளிக்கிறது.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; அதேவேளையில், தீ விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பதை கண்டறியும் நோக்கில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.