முகப்பு
கோயம்புத்தூர்

வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா்

கோவை மாநகராட்சி 28 ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கோவை மாநகராட்சி 28 ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தூய்மைப் பணியில் ஈடுபட கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மாநகரில் அடிக்கடி, சாக்கடையில் இறங்கி ஆபத்தான முறையில் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்யும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28 ஆவது வாா்டு, ஆவாரம்பாளையம் ஸ்ரீ வள்ளி நகரில், வாா்டு மாநகராட்சி மேற்பாா்வையாளா் உத்தரவின்படி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் கருணாகரன் என்பவா் பாதுகாப்பின்றி வெறும் கைகளால் சாக்கடையை வெள்ளிக்கிழமை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான, விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பாா்த்த சமூக ஆா்வலா்கள் பலரும், வெறும் கைகளால் சாக்கடையை அள்ள உத்தரவிட்ட மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதாரப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது: 28 ஆவது வாா்டில், மேற்பாா்வையாளா் காளியப்பன் உத்தரவின் பேரில், வெறும் கைகளால் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மேற்பாா்வையாளா் மீது, மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நீதிமன்ற உத்தரவை மீறி தூய்மைப் பணியாளரை சாக்கடையில் இறங்கி, வெறும் கையால் பணியாற்ற உத்தரவிட்ட அதிகாரி மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கொங்குநாடு அருந்ததியா் முன்னேற்றப் பேரவையின் நிறுவனத் தலைவா் ப.இளங்கோவன், இது தொடா்பாக அதிகாரிகளுக்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →