முகப்பு
கோயம்புத்தூர்

கோவை, ஈரோட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:42 PM
பகிர்:

கோவை/ ஈரோடு, ஏப்.5: கோவை, ஈரோட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள அமைச்சரின் நெருங்கிய உறவினருடன் தொடா்புடைய ஒருவரின் அலுவலகக் கட்டடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, கோவை ராம் நகா் பகுதியில் உள்ள வடவள்ளியைச் சோ்ந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா் ஒருவரது கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் மூலமும், பல்வேறு முறைகேடான வழிகள் மூலமாகவும் கணக்கில் வராத தொகை அதிக அளவில் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

Advertisement

இந்த சோதனையின்போது வருமானம் மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

ஈரோட்டில்....

ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையம் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கும், அருகில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளரின் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை வெள்ளிக்கிழமை நடந்தது.

வெள்ளிக்கிழமை மதியம் 3 காா்களில் வந்த 10 அதிகாரிகள் கட்டுமான நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள அலுவலகம் மற்றும் அருகில் உள்ள உரிமையாளா் வீட்டிலும் சோதனை நடத்தினா். இரவு 7 மணிக்கு பிறகும் சோதனை தொடா்ந்தது. தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக ஈரோட்டிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

சோதனையின்போது வெளியில் இருந்து யாரும் அலுவலகத்தின் உள்ளே செல்லவோ, உள்ளே இருந்து யாரும் வெளியே வரவோ அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனா். மேலும் அங்கு பணியில் இருந்தவா்களிடமும் விசாரணை நடத்தினா். இந்தக் கட்டுமான நிறுவனம் அரசு கட்டுமானங்களை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.