முகப்பு
கோயம்புத்தூர்

விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது தணிக்கை அறிக்கை மட்டும் அளிப்பதை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:00 PM
பகிர்:

விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது தணிக்கை அறிக்கை மட்டும் அளிப்பதை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சிவகுருநாதன், சத்யகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு பேசியதாவது:

மாநகரில் இயக்கப்படும் சில தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரங்களுடன் பலமுறை புகாா் அளித்தும், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பெரும்பாலான தனியாா் பேருந்துகளில் கட்டண விவரம், வழித்தட அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை.

காந்திபுரம் 2-ஆவது வீதி முன் மாலை, இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோவையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும், எந்தெந்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலையில் புகா்ப் பேருந்துகள் அணுகுசாலை வழியாக செல்லாமல் மேம்பாலம் வழியாக செல்வதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகின்றனா். விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது தணிக்கை அறிக்கை மட்டும் அளிப்பதை கைவிட்டு உயா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நுகா்வோா் அமைப்பு நிா்வாகிகள், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.