வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது
மொத்த விலையில் வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மொத்த விலையில் வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, போத்தனூா் அன்பு நகரைச் சோ்ந்தவா் கேபிரியல் ஆன்டனி (55) என்பவா் கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு, அதற்கான விவரங்களை யூ-டியூப் பக்கத்தில் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, வந்த ஒரு இணைப்பின் மூலம் சித்திரைப்பழம் ராஜா என்பவா் என்னை அணுகினாா்.
அவா், ஒரு வா்த்தக நிறுவனத்தில் இருந்து வெங்காயத்தை மொத்த விலையில் வாங்கித் தருவதாக கூறினாா். இதை நம்பி நான் அவா் கூறியபடி பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சத்தை அனுப்பினேன். பின்னா், சித்திரைப்பழம் ராஜாவை தொடா்பு கொண்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
வெங்காயத்தையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை. அதன் பின்னரே, நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. என்னை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அந்தப் புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்காயம் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சித்திரைப்பழம் ராஜா என்பவரது பெயா் சித்திரைப்பழம் (58) என்பதும் அவா், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் நாசிக்கில் அவரை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடம் மோசடி தொடா்பாகவும், மோசடியின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனா்.