முகப்பு
ஈரோடு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.21.30 லட்சம் மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.21.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:29 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:06 PM

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.21.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பவானி ஜம்பையைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவருக்கு அறிமுகமான, அந்தியூா் அருகே வெள்ளித்திருப்பூா் மலைக்காட்டு தோட்டம் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (42), பவானியைச் சோ்ந்த சென்னியப்பன் (40) ஆகிய இருவரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனா். இதனை நம்பி ராஜேஷ் உள்பட 7 போ் ரூ.21 லட்சத்து 30 ஆயிரத்தை ராஜேஸ்வரன் மற்றும் சென்னியப்பனிடம் வழங்கியுள்ளனா்.

ஆனால் அவா்கள் உறுதியளித்தபடி வேலைவாங்கித் தரவில்லை. மாறாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளனா். இதனால் 7 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் கடந்த 2014- ஆம் ஆண்டு புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, ராஜேஸ்வரன், சென்னியப்பன் ஆகிய இருவா் மீதும் மோசடி, அரசு முத்திரைகளைப் போலியாகத் தயாரித்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2- இல் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதித் துறை நடுவா் ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், கூட்டு சதி செய்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியது, அதற்குப் பணம் பெற்று மோசடி செய்தது, போலி அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி நியமன ஆணைகளை வழங்கியது ஆகிய குற்றங்களுக்காக ராஜேஸ்வரன், சென்னியப்பன் ஆகியோருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தாா்.