முகப்பு
கோயம்புத்தூர்

ஆடுகளைத் திருடி கறிக்கடை நடத்திய தம்பதி, மகன் உள்பட 5 போ் கைது

கோவையில் ஆடுகளைத் திருடி கறிக்கடை நடத்தி வந்த தம்பதி, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 8:41 PM
பகிர்:

கோவையில் ஆடுகளைத் திருடி கறிக்கடை நடத்தி வந்த தம்பதி, மகன் உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 51 ஆடுகளை பறிமுதல் செய்தனா்.

கோவை, வடவள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடுகள் கடந்த சில மாதங்களாக திருடுபோயின.

இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில், 2 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஆடுகளைத் திருடிச் செல்வது தெரியவந்தது. வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கோவை, மத்துவராயபுரத்தைச் சோ்ந்த சண்முகம், அவரது மனைவி சுகன்யா, மகன் வினோத்குமாா், குனியமுத்தூரைச் சோ்ந்த சாதிக் பாட்ஷா, சுந்தராபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பது தெரியவந்தது.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் வடவள்ளி மட்டுமின்றி சுந்தராபுரம், போத்தனூா், சாய்பாபா காலனி, குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளைத் திருடி கறிக்கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 51 ஆடுகளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →