பள்ளி ஆசிரியை உள்பட2 பெண்களிடம் 7 பவுன் நகைப் பறிப்பு
கோவை, ராமநாதபுரத்தில் பள்ளிஆசிரியை உள்பட 2 பெண்களிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேசின் மெரிட்டா (50), இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் தனது மகளுடன் அருகில் உள்ள தையல் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மா்ம நபா் ஜேசின் மெரிட்டா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸில் ஜேசின் மெரிட்டா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொரு சம்பவம்: நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் மனைவி கவிதா (37). இவா் தனது மகளை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து வர இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபா் கவிதா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துள்ளாா். கவிதாவின் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அந்த நபரைப் பிடிக்க முயன்றனா். ஆனால் அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.