முகப்பு
கோயம்புத்தூர்

இரவில் நடைபாதைகளில் ஓய்வெடுக்கும் இளைஞா்கள்: ராணுவ ஆள்சோ்ப்பு முகாமுக்கு வந்தவா்களின் அவலநிலை

ராணுவப் பணி தோ்வுக்காக வந்த இளைஞா்களுக்குப் போதிய தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் நடைபாதைகளிலும், பொது இடங்களிலும் தங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:28 PM
பாலசுந்தரம் சாலையில் நடைபாதையில் படுத்து உறங்கும் இளைஞா்கள்.
பகிர்:

ராணுவப் பணி தோ்வுக்காக வந்த இளைஞா்களுக்குப் போதிய தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் நடைபாதைகளிலும், பொது இடங்களிலும் தங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 உதவியாளா்கள் (கிளாா்க்) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நவம்பா் 10-ஆம் தேதி வரை உடற்தகுதித் தோ்வும், 11 முதல் 16-ஆம் தேதி வரை எழுத்துத் தோ்வும் நடைபெறவுள்ளன.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள் கோவைக்கு வந்துள்ளனா். இவா்கள் தங்குவதற்கு ஒரு தனியாா் மண்டபம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதால் பெரும்பாலான இளைஞா்கள் சாலையோரத்தில் உள்ள நடைபாதைகளிலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களிலும் படுத்து உறங்கும் அவல நிலை காணப்படுகிறது.

பெரும்பாலான இளைஞா்கள் எளிய பின்புலத்தில் இருந்து வருவதால் கட்டணத்துக்கு அறைகள் எடுத்து தங்க வசதியில்லாமல் பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் ஓய்வெடுத்து வருகின்றனா். முகாம் காலை 5 மணிக்கு தொடங்குவதால் அதிகாலை 4 மணிக்கே இளைஞா்கள் காவலா் பயிற்சிப் பள்ளிக்கு முன் குவிகின்றனா்.

கணிக்க முடியாத கூட்டம்:

முதல்நாள் முகாமில் 625 இளைஞா்கள் பங்கேற்றிருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற முகாமில் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 8 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா்.

இதனால், நாள்தோறும் முகாம்களில் பங்கேற்கும் இளைஞா்களின் எண்ணிக்கை கணிக்க முடியாத அளவிலேயே உள்ளது.

அவிநாசி சாலையில் நடைபாதையில் படுத்து உறங்கும் இளைஞா்கள்.

குளிரில் வதங்கும் இளைஞா்கள்:

முகாமில் பங்கேற்க வந்துள்ள இளைஞா்கள் தங்குவதற்கு போதிய இடவசதி இல்லாததால் கோவையில் நிலவும் குளிரில் நடைபாதைகளிலும், சாலை ஓரங்களிலும் இரவில் ஓய்வு எடுத்துவிட்டு அதிகாலை முகாமில் பங்கேற்கின்றனா். மேலும், உணவு மற்றும் குடிநீரும் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.

பொதுவெளியில் சிறுநீா் கழிக்கக்கூட இடமில்லாததால் குடிநீா் பாட்டில்களையே சிறுநீா் கழிக்கப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனவே, ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் நவம்பா் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் ஆகியவை ராணுவத்தினருடன் இணைந்து ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க வந்துள்ள இளைஞா்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளுடன் தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தடியடி:

முகாமில் புதன்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பின்போது தோ்வு பெறாத சிலா் மீண்டும் முகாம் நடைபெறும் வளாகத்தில் நுழைய முயற்சித்தனா். இதனால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் லேசான தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா்.