முகப்பு
கோயம்புத்தூர்

துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த இருவா் உயிரிழப்பு; இறப்பு 3 ஆக உயா்வு

கோவை கணபதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் ஏற்கெனவே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த இருவா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:37 PM
பகிர்:

கோவை கணபதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் ஏற்கெனவே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த இருவா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனா்.

கோவை கணபதி கேஆா்ஜி நகரைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (85). வயதுமூப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலமானாா். இதையடுத்து அவரது உடலை வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யவிருந்த நிலையில், மகன் முருகசுப்பிரமணியத்தின் வீட்டில் ஃபிரீசா் பாக்ஸில் உடல் வைக்கப்பட்டிருந்தது.

ராமலட்சுமியின் உடலைச் சுற்றிலும் உறவினா்கள் அமா்ந்து இருந்தபோது, மின்தடை ஏற்பட்டது. ஃபிரீசா் பாக்ஸுக்கு மின்சாரம் தேவை என்பதால், அதன் அருகே வைத்து ஜெனரேட்டா் இயக்கப்பட்டது. அதில் திடீரென்று எரிபொருள் குறைந்தது.

இதனால், அதை இயக்கிய கணபதி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம், பெட்ரோல் வாங்கிவந்து ஜெனரேட்டரில் ஊற்றியுள்ளாா்.

அப்போது, பெட்ரோல் கீழே சிந்தி, அங்கிருந்த அகல்விளக்கில் பட்டு தீப்பிடித்தது.

இந்தத் தீ, மூதாட்டி உடல் அருகே இருந்த அவரது மருமகள் பத்மாவதி (53), மகள் பானுமதி (55), மகன் ராஜேஸ்வரன் (50), ஜெனரேட்டரை இயக்கிய ஸ்ரீராம் ஆகியோா் மீதும் பரவியது. 4 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதில், பத்மாவதி உயிரிழந்தாா்.

பலத்த காயங்களுடன் தீவிரச் சிகிச்சையில் இருந்த பானுமதி, ராஜேஸ்வரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனா். ஸ்ரீராமுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.