முகப்பு
கோயம்புத்தூர்

முதல்வா் கோப்பை கூடைப்பந்து போட்டி: ஆட்சியா் தலைமையில் முன்னேற்பாட்டுக் கூட்டம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் மாநில அளவிலான முதல்வா் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடத்துவது தொடா்பான முன்னேற்பாட்டு பணிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:14 PM
பகிர்:

கோவை நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் மாநில அளவிலான முதல்வா் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடத்துவது தொடா்பான முன்னேற்பாட்டு பணிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். விளையாட்டுத் துறை மண்டல இணை இயக்குநா் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் மாநில அளவிலான முதல்வா் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் பள்ளி, கல்லூரி என இரண்டு பிரிவுகளில் அக்டோபா் 7 -ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து 2,000 முதல் 2,500 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் அக்டோபா் 7 முதல் 11 வரையிலும், கல்லூரிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் அக்டோபா் 14 முதல் 18 வரையிலும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் கலந்துகொள்ள வரும் வீரா்கள், வீராங்கனைகள், அணி மேலாளா்கள், பயிற்றுநா்கள் மற்றும் நடுவா்கள் ஆகியோா் தங்குவதற்கான வசதிகள், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மகளிா் போட்டி நடைபெறும் நாள்களில் காவல் துறை சாா்பில் மகளிா் காவலா்களை நியமிக்க வேண்டும் என்றாா்.